Tuesday, September 13, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!



சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தோடு சித்தானான்”

என்று ஸ்வர்ணாகர்ண பைரவாஷ்டகம் கூறுகிறது. பைரவரின் அவதாரத்தின் காரணமும் சதுர்முகனின் தலையைக் கொய்வது தான். ஈசனைப் போலவே ஐந்து முகங்களுடனே இருந்தான் பிரம்மாவும். சதுர்முகனின் ஐந்து முகங்களையும் ஒரு சமயம் ஒரு சேரப்பார்த்த தேவியே ஈசனுக்கும், சதுர்முகனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு கண நேரம் மயங்க சதுர்முகனின் ஆணவம் தலைக்கு ஏறியது. மதிமயங்கிய சதுர்முகன் சிவநிந்தனை செய்யத் துவங்க, அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் அந்த ஐந்தாவது சிரத்தைத் துண்டிக்க எண்ணி பைரவரைத் தோற்றுவித்தார். வடுகனாக, (சின்னஞ்சிறு பிரம்மசாரியை வடு என்பார்கள்) சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் ஜடாமுடிகளுடனும், அந்த சிவந்த ஜடாமுடியில் குளிர் நிலவான சந்திரப் பிறையுடனும், கைகளில் உடுக்கை, சூலம், ஏந்தியவண்ணம், பாசக்கயிற்றையும் ஏந்திய வண்ணம் தோன்றிய பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுக்க அதுவும் அவர் கரங்களில் தங்கலாயிற்று. நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக மாறி வாகனமாக மாற, மூன்று கண்களோடும், இவ்வுலகையும், மற்றும் அனைவரையும் காப்பாற்றும் க்ஷேத்திர பாலகராய், பூத, பிசாசுக்கூட்டங்களுக்கும் தலைவனாய்த் தோன்றினார் பைரவர். இவரை வடுக பைரவர் என்பார்கள்.

இந்தக் கதையை பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடிய கதையோடும் சம்பந்தப்படுத்தி, அதிலே பிரம்மா பொய்யுரைத்ததால் பிரம்மாவின் சிரத்தை அறுக்குமாறு கட்டளையிட்டதாயும் ஒரு கூற்று உண்டு. எப்படி இருந்தாலும் பிரம்மாவின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கத் தோன்றியவரே பைரவர். இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கண்டியூர் என்பார்கள். ஈசனின் அட்ட வீரட்டானத் தலங்களில் முதன்மையான வீரமும் இதுவே. முதன்மையான வீரட்டானத் தலமும் இதுவே. பிரம்மாவின் சிரத்தைக் கொய்த பைரவருக்கு இங்கே தனிச் சந்நிதி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். பிரம்மாவின் சிரத்தைக் கொய்தவண்ணம் காணப்படும் சிற்ப அதிசயம் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ளதாயும் கேள்விப் படுகிறோம். இதிலே பிரம்மா தன் ஐந்தாவது தலையை இழந்துவிட்டு அந்த பயத்துடனேயே நிற்பது போல் காட்சி அளிக்கிறார் என்றும் தெரிய வருகிறது. கொஞ்சம் கோபத்துடன் பைரவர் காணப்படுவார். இவ்வுலகைக்காக்கும் பொறுப்பை ஈசன் பைரவருக்கு அளித்திருப்பதாயும், இரவெல்லாம் தன் வாகனமும், தோழனுமான நாயுடன் பைரவர் சுற்றி வந்து காவல் புரிவதாயும் ஐதீகம்.

பைரவர் என்றாலே பயங்கரமான ஆள் என்றே அர்த்தம். பாதுகாவலர் என்பதால் பெண்கள் இவரை வழிபட்டால் பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்து காத்துவருவார். வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே இவரும் உறுதியாகத் தன் காவல் வேலையைச் செய்து வருவதால் சில இடங்களில் இவர் வைரவர் எனவும் அழைக்கப் படுகிறார். வைரவன் பட்டி என்ற பெயரில் ஒரு தலம் செட்டிநாட்டுப் பகுதியில் காண முடியும். சில இடங்களில் ஒரே ஒரு நாயுடனேயே காணப்படுவார். சிவன் கோயில்களின் வெளிபிரஹாரத்திலேயே குடி கொண்டிருக்கும் வைரவர் என்னும் பைரவரின் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்துவிடுவார் என்றும் மறுநாள் காலை வரை சாவி அந்த இடத்திலெயே இருக்கும் என்று செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.


இந்தியாவில் பைரவ வழிபாடு பிரபலமான ஒன்று என்றாலும் ராஜஸ்தானிலும், நேபாளத்திலும், காசியிலும் மிகச் சிறப்பாக வழிபடுகின்றனர். பெளத்தர்களுக்கும் பைரவ வழிபாடு உண்டு என்றும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. இது குறித்த உறுதியான தகவல் இல்லை. பைரவரை எட்டு விதமாக வழிபடுகின்றனர்.

கால பைரவர்
அஸிதாங்க பைரவர்
சம்ஹார பைரவர்
ருரு பைரவர்
க்ரோத பைரவர்
கபால பைரவர்
ருத்ர பைரவர்
உன்மத்த பைரவர்
கால பைரவர் தான் சனி பகவானின் குரு என்றும் கருதப்படுகிறார். சிங்களத்திலும் பைரவ வழிபாடு உண்டு. சொத்துக்களைப்பாதுகாப்பவராய்க் கருதப் படுகிறார். தமிழ்நாட்டிலோ வைரவர் என்ற பெயரில் எட்டுத் திக்கையும் காக்கும் கிராம தேவதையின் உருவிலோ, அல்லது வைரவர் என்ற பெயரிலோ வணங்கப் படுகிறார். சிவ வழிபாட்டின் அகோர வழிபாடு என்னும் பிரிவில் பைரவர் முக்கியமான அங்கம் வகிக்கிறார்.

No comments: