Tuesday, June 5, 2012


மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு. மாலையில் கோவில் சென்று மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிட சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்த கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும்.

சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பது தான். பைரவர் விரதம் இருந்தால் அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும்.


சிவபெருமானின் அட்ட வீரட்டக் கோலங்கள் எட்டும் பைரவ கோலங்களே. இதில் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்த கபால பைரவர் பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்தகாசூர வதத்தின்போது அவர் திரிசூல பைரவராக வெளிப்பட்டு நெடுஞ்சூலத்தில் அவனைக் குத்தித் தூக்கிக் கொண்டு மூவுலகிலும் பவனி வந்தார்.

யானையை உரித்து வீரம் விளைத்த கஜசம்ஹார கோலம், கோலகால பைரவரென்று தேவாரத்துள் குறிக்கப்படுகிறது. அப்பர் சுவாமிகள் வேழம் உரித்த விகிர்தனான சிவபெருமானைப் போற்றித் திருச்சேறையில் அருளிய பதிகத்தில் பைரவனாகவே போற்றுகின்றார்.

இது போன்றே முப்புரங்களைத் தீயூட்டி திரிபுராதிகளை அழித்து மீண்டும் அவர்களுக்கு அருள் புரிந்த திருக்கோலமே திரிபுர பைரவர். இதில் வில்லேந்திய கோலத்தில் அவர் விளங்குகிறார். டமருகம்(உடுக்கை), பாசமாகிய முத்தலைப் பாம்பு, வாள், கேடயம், திரிசூலம், கபாலம், வில் அம்புடன் காட்சி தருகிறார்.

இந்தக் கோலத்தில் அவர் நின்றபோது, தேவர்கள் அவரைக் கண்டு அச்சத்தால் துவண்டு சரணடைந்து போற்றித் துதித்ததே ஸ்ரீருத்ரம். அதுவே யசூர் வேதத்தின் மையப்பகுதி. தேவர்களின் ஸ்ரீருத்ர தோத்திரத்தாலும்,அவர்களின் வேண்டுகோளாகிய சமகத்தாலும், மகிழ்ந்து சிவபெருமான் அவர்கள் வேண்டிய வரங்களை அளித்தார் என்று சிவமகாபுராணம் கூறுகிறது.

சகல செல்வங்களையும் தந்து மகிழ்ச்சியை அருளும் திரிபுர பைரவரை வணங்கினால், மேலான வாழ்வு பெறலாம். திரிபுரங்களை எரித்த பின், அந்தச் சாம்பல் படிந்து எங்கும் வெண்மையாக இருந்தது.

அந்த வெண்மையான இடத்தில் பெருமான் பிரம்மன் கீழ் திரிபுர தாண்டவத்தை ஆடினான். பின்னர் தனது உக்கிர வடிவை மாற்றி ஆனந்த வடிவாக நின்றான். அந்த வடிவை புராணங்கள் திரிபுராந்தகன் என்று கொண்டாடுகின்றன.