Tuesday, November 29, 2011


தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் வழியில், நல்லம்பள்ளி - அதியமான்கோட்டை உள்ளது. இங்கே, காசியம்பதிக்கு அடுத்தாற் போல், தனிக்கோயிலில் இருந்தபடி அனைவருக்கும் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீகாலபைரவர்! இங்கே, உன்மத்த பைரவராகக் காட்சி தரும் அழகே அழகு!
அதியமான் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் விதானத்தில், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான நவக்கிரகச் சக்கரங்கள் உள்ளன என்பது சிறப்பு. எனவே, 27 நட்சத்திரக் காரர்களும் வணங்கி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்! தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில், மாணவர்கள் விளக்கேற்றி வழிபட, கல்வி - கேள்வியில் சிறந்து விளங்குவார்கள்; தடைப்பட்ட திருமணத்தால் கலங்குவோர், மஞ்சள்கிழங்கு மாலை அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர். குடும்பத்தில் கடனும் கஷ்டமும் தீரவேண்டும் என்று சாம்பல் பூசணி விளக்கேற்றி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டுப் பலன் பெறலாம்; நினைத்தது நிறைவேறும் எனப் போற்றுகின்றனர் தருமபுரி வாழ் மக்கள்!

நன்றி ! சக்தி விகடன்

Monday, November 28, 2011


ஸ்ரீதத்துவநிதி எனும் நூல் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைர வரைப் பற்றி விவரிக்கிறது. ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும் இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன்-பொருள் சேரும்; ஐஸ்வரியம் பெருகும் என்பர்.

சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஒரு பைரவர், ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். திகம்பரராக, டமருகம், சூலம், பாசம் மற்றும் கபாலம் ஏந்தியவராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அருகில், நாய் வாகனமும் உள்ளது.

முற்காலத்தில், தில்லை கோயிலில் சேவை செய்யும் அந்தணர்கள், பூஜை முடிந்ததும் செம்பினால் ஆன தாமரையை பைரவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்வார்களாம். மறுநாள், ஸ்வாமியைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வர். அது, அவர்களுடைய பணிகளுக்கேற்ப, பொன்னாக மாறியிருக்கும் என்றொரு (செவிவழி) தகவல் உண்டு! இன்றும் தன்னை வணங்கும் அன்பர்களின் மனப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்று, அருள் வழங்கி வருகிறார் ஸ்ரீபைரவமூர்த்தி!

நன்றி ! சக்தி விகடன் 

Sunday, November 27, 2011


பைரவரை முழுமுதலாகக் கொண்ட சமயம்- பைரவம். தவிர, காபாலிகர்களும் பாசுபதர்களும்கூட ஸ்ரீபைரவரைச் சிறப்பாக வழிபடுகின்றனர். ஸ்ரீபைரவரை சூரிய சமயத்தவர் (சௌமாரம்) மார்த் தாண்ட பைரவராகவும், முருகன் ஆலயத்தில் குமார பைரவராகவும், விநாயகர் கோயிலில் பிரமோத பைரவராகவும் வழிபடுவர்.

சிவனாரின் வீரச்செயல்கள் எட்டாகும். அதேபோல், அவரது வீரவெளிப்பாடாக விளங்கும் பைரவரும்... அஜிதாங்கன், ருரு, சண்டன், உன்மத்தன், கபாலன், பீஷ்ணன், க்ரோதன் மற்றும் சம்ஹார பைரவர் என எட்டு திருவடிவங்களுடன் அருள்கிறார். இவர்கள் எண்மருக்கும் தேவியராகத் திகழும்... பிராம்மஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகியோர் அஷ்ட மாதர்களாகப் போற்றப்படுகின்றனர்.

புண்ணியமிகு காசியில்... அனுமன் காட்டில்- ருரு பைரவரும்; துர்காமந்திரில்- ஸ்ரீசண்ட பைரவரும்; விருத்தகாளேசுவரர் ஆலயத்தில் அமிர்த குண்டத்தின் முன்புறம்- ஸ்ரீஅஜிதாங்க பைரவரும்; லட் பைரவர் கோயிலில்- ஸ்ரீகபால பைரவரும், காமாச்சா எனும் இடத்தில்- ஸ்ரீவடுக பைரவர் எனும் பெயரில் ஸ்ரீகுரோதன பைரவரும், தேவரா கிராமத்தில்- ஸ்ரீஉன்மத்த பைரவரும்; திரிலோசன கஞ்ச் (பாட்டன் தர்வாஜாவுக்கு அருகில்) ஸ்ரீசம்ஹார பைரவரும்; காசிபுரா எனும் இடத்தில்- ஸ்ரீபீஷண பைரவரும் அருள்பாலிக்கின்றனர்!

சீர்காழி, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத் தின் (தெற்கு) வெளிப் பிராகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் சுதந்திரர், சுயேச்சர், லோகர், காலர், உக்ரர், பிரச்யர், நிர்மாணர், பீஷ்ணர் ஆகிய அஷ்ட பைரவர்களைத் தரிசிக்கலாம். குற்றாலம் சித்திர சபையில் அஷ்ட பைரவரின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

நகரத்தார் சீமையிலுள்ள... திருப்பத்தூர், பிள்ளையார்பட்டியை அடுத்துள்ள வைரவன் பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம் வைரவன்பட்டி, காரையூர், நெடுமரம், இலுப்பைகுடி என்ற எட்டும் அஷ்ட பைரவ தலங்களாகப் போற்றப்படுகின்றன.

நன்றி ! சக்தி விகடன் 

Saturday, November 26, 2011


பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி, ரதசப்தமி, உத்தராயன புண்ணியகாலத் துவக்கம் என எண்ணற்ற வைபவங்களுடன் திகழும் தை மாதத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு. ஆமாம், காவல் தெய்வமாம் ஸ்ரீபைரவர் வழிபாட்டுக்கும் உகந்த மாதம், தை!
தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி, இந்த மாதத்தின் அனைத்துச் செவ்வாய்க்கிழமைகளிலும் பைரவரை வழிபடுவது சிறப்பு.
அதிலும், ஸ்ரீபைரவரின் மகாத்மியத்தை அறிந்து வழிபடுவதால், பலன்கள் பன்மடங்கு அதிகம் கிடைக்குமே! அறிந்துகொள்வோமா ஸ்ரீபைரவ மகிமையை!
சிவாலயங்களில், ஸ்ரீவிநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிக்கும் வழிபாடு,  ஸ்ரீபைரவ தரிசனத்துடன் நிறைவடையும். ஆமாம், அகில உலகங்களையும் காத்து ரட்சிக்கும் சிவனாரின் கோயில்களுக்கு, ஸ்ரீபைரவரே காவல் தெய்வம்! உலகையும் அதில் அமைந்த திருத்தலங்கள் மற்றும் தீர்த்தங்களையும் காவல் புரியும் தெய்வம் ஆதலால், க்ஷேத்ரபாலகன் என்றும், தீர்த்தபாலகன் என்றும் ஸ்ரீபைரவரை பலவாறு போற்றுகின்றன புராணங்கள்!
தன்னுடைய அன்பர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயோர் களுக்கு பயங்கரமானவராகத் திகழ்வதால் ஸ்ரீபைரவர் என்றும், வஜ்ஜிரகோட்டையாகத் திகழ்ந்து, தன்னைச் சரணடையும் பக்தர்களைக் காப்பவர் ஆதலால் ஸ்ரீவயிரவ மூர்த்தி என்றும் இவருக்குத் திருப்பெயர்! இவர், ஞானிகளிடம் அறிவை வளர்க்கும் ஸ்ரீஞான பைரவராகவும், யோகிகளுக்குக் காவலாக இருப்பதுடன், தாமே பெரிய யோகியாக விளங்கி ஸ்ரீயோக பைரவராகவும், வீரர்களிடம் உக்கிர பைரவராகவும், பஞ்சபூதங்களின் சீற்றங்களில் இருந்து பூமியைக் காப்பதால் ஸ்ரீபூத பைரவராகவும் அருள் புரிவதாக ஆன்றோர்கள் சிலாகிக்கிறார்கள்!
உலகையும் உயிர்களையும் காக்கும் தன்மை சிவ பெருமானுக்கே உரியது என்பதால், அவருடைய ஒருகூறே பைரவமூர்த்தியாக எழுந்தருளி, அன்பர்களுக்கு அருள்கிறது என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மன், ஆதி காலத்தில் சிவனாரைப் போன்றே ஐந்து தலைகளுடன் திகழ்ந்தார். ஒருமுறை, அவர் அகந்தையால் அறிவு மயங்கிச் சிவ நிந்தனை செய்தபோது, சிவபெருமான் பைரவரைத் தோற்றுவித்தார். பைரவர், பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுத்துக் கபாலமாக்கிக் கொண்டார்.அடி-முடி தேடியபோது, 'திருமுடி கண்டேன்எனப் பொய்யுரைத்ததால், பிரம்மனின் 5-வது தலையை பைரவர் மூலம் கொய்ததாகவும் ஒரு புராணத் தகவல் உண்டு.
பிரம்மனின் சிரம் கொய்யப்பட்ட திருவிடம் திருக்கண்டியூர் ஆகும். தஞ்சாவூர்- திருவையாறு பாதையில் உள்ள இந்த ஊர், சிவனாரின் அட்ட வீரட்ட திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அருள்பாலிக்கும் திருக்கண்டீஸ்வரரையும், பிரம்மனின் சிரம்கொய்த பைரவரையும் தரிசிப்பது சிறப்பு.
ந்தகாசுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்தியதுடன், அவர்களைப் பெண் வேடத்துடன் திரியும்படிச் செய்து அவமானப் படுத்தினான். தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவர், ஸ்ரீமகாபைரவரைத் தோற்றுவித்து அந்தகனை அழிக்கும்படி ஆணையிட்டார். அதிஉக்கிரத்துடன் அந்தகன் மீது போர்தொடுத்த பைரவர், அவனைத் தனது சூலத்தில் குத்தித் தூக்கியவாறு மூன்று உலகங் களிலும் திரிந்தார். அவனுடைய உடலிருந்து வழிந்த ரத்தத்தைக் குடித்தார். அஞ்சி நடுங்கிய அந்தகாசுரன், பைரவரைத் துதித்தான். அதனால் மகிழ்ந்த ஸ்ரீபைரவர், அவனைச் சூலத்தில் இருந்து விடுவித்தாராம். அதேபோல், முண்டகன் முதலிய இன்னும்பல அசுரர்களையும் அழித்து, ஸ்ரீபைரவர் தேவர்களைக் காத்து பரிபாலித்த கதைகளும் புராணங்களில் உண்டு.
வானவர்களுக்கு மட்டுமல்ல, தூய பக்தியுடன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் வேண்டிய வரம் தந்து அருள்பாலிக்கும் கண்கண்ட தெய்வம் ஸ்ரீபைரவர். கடன் தொல்லை நீங்கவும், சத்ருபயம் அகலவும், பில்லி-சூனியம் போன்ற தீவினைகளின் பாதிப்புகள் இல்லாமல் இருக்கவும் ஸ்ரீபைரவரை பலவாறு போற்றி வழிபடுகின்றனர்.
தேய்பிறை அஷ்டமி திருநாள் ஸ்ரீபைரவரை வழிபடுவதற்கு உகந்த தினம். குழந்தை இல்லா மல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி திருநாட்களில்... செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர்.
அதேபோல், தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ ஹோமம் செய்வ துடன், பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் கலச தீர்த்தத்தைப் பருகுவதால் தீராத பிணிகளும் தீரும் என்பர்.
அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று, அங்கு அருள்பாலிக்கும் பைரவமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி, தயிர் அன்னம், தேன் மற்றும் தேங்காய் சமர்ப்பித்து வழிபடுவதால், பில்லிசூனியம் போன்ற தீவினைகள் நீங்கும்; பகைவர்களும் நண்பர்களாவார்கள். வீட்டிலேயே நேரம் கிடைக்கும்போது, ஸ்ரீபைரவ சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதாலும் மிகுந்த பலன் உண்டு.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், ஸ்ரீபைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும் என்பார்கள். வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் அல்லது வெள்ளிக்கிழமை மாலை வேளையில்,
வில்வம் மற்றும் வாசனை மலர்களைச் சமர்ப்பித்து ஸ்ரீபைரவருக்கு  நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும்; செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனீஸ்வரரின் அதிதேவதை பைரவர். சனிக்கிழமைகளில் ஸ்ரீபைர வருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகுமாம். ஸ்ரீமகாபைரவரை திரிபுர பைரவராகவும் வழிபடும் வழக்கம் உண்டு. கரைசேர முடியாத பெருந்துன்பங்களையும் நீக்கி அருள்புரிவாராம் ஸ்ரீதிரிபுர பைரவர்.
கோயில்களில் நடைபெறும் பிரம்மோற்ஸவத்துக்கு  முன்பாகவும் விழா முடிந்த பின்னரும் ஸ்ரீபைரவரை வழிபட வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள். முன்பெல்லாம், சிவாலயங்களில் இரவில் பைரவரை பூஜித்து வழிபட்டு, ஆலயக் கதவுகளை மூடி, சாவியை அவரது சந்நிதியில் சமர்ப்பிப்பது வழக்கம். இப்போது, கைமணியையும் கலசத் தையும் அவர்முன் வைத்துச் செல்கின்றனர்!
கோயிலுக்குச் சென்று வழிபாடு முடித்துத் திரும்புமுன் ஸ்ரீபைரவரை மனதார தரிசித்து வழிபட்டு, உங்கள் பிரச்னைகளையும் அவரின் திருப்பாதத்தில் சமர்ப்பித்து வாருங்கள்; ஒட்டுமொத்த இன்னல் களையும் நீக்கி, உங்களையும் உங்கள் சந்ததியையும் சிறப்பாக வாழ வைப்பார் ஸ்ரீபைரவர்.

நன்றி ! சக்தி விகடன் 

Sunday, November 20, 2011


புண்ணியதேசமான காசியம்பதியை அறிவோம். அந்த தேசத்தைக் கட்டிக் காத்தருள்பவர், ஸ்ரீகால பைரவர். புண்ணிய ஸ்தலத்தைக் காபந்து செய்யும் இவரின் திருச்சந்நிதியில் வேண்டிக்கொண்டு, காசி கயிறு எனப்படும் திருஷ்டிக் கயிற்றைக் கையில் கட்டிக்கொண்டால், நமக்குக் கைகொடுத்து, துயரங்களிலிருந்து நம்மைக் கரையேற்றிவிடுவார், ஸ்ரீகால பைரவர்.

சிவனாரின் அம்சமான ஸ்ரீகால பைரவர், ஆணவத்தால் தலை கால் புரியாமல் ஆடிய ஸ்ரீபிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார். இதனால் பிரம்மஹத்தி தோஷத் துக்கு ஆளாகி, புண்ணியத் தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழிபட்டார்; புனித குளத்தில் நீராடினார். பலனில்லை. இறுதியாக, காசியம்பதிக்கு வந்து, கங்கையில் நீராடி, சிவ தரிசனம் செய்த பிறகுதான், அவரின் தோஷம் நீங்கியது என்கிறது ஸ்தல புராணம். இதையடுத்து, இங்கே ஸ்ரீகால பைரவருக்கு அழகிய ஆலயமும் உருவானது. காசியின் முக்கியப் பகுதியான மைதாகினியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர் கன்ச்சில் அமைந்துள்ளது இந்த ஆலயம். உள்ளே நுழைந்ததும், வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகால பைரவரின் திருமேனியை கண்ணாரத் தரிசிக்கலாம்.




''ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. 'இவருடைய அனுமதியில்லாமல், காசியில் காற்று கூட நுழையாது; காசி மரத்து இலைகள்கூட அசையாது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இவரை வணங்கினால், பஞ்சமா பாதகங்களும் விலகிவிடும்; முக்தி கிடைக்கப் பெறலாம். இங்கு இவருக்கு சைவ- அசைவ உணவு ஆகிய இரண்டுமே படைக்கப்படுகின்றன. அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு'' என்கிறார் பைரவர் கோயிலின் பரம்பரை அர்ச்சகர் விஸ்வநாத் பாண்டே.




காசி, அனுமன்காட்டில் உள்ள சங்கரமடத்தில் சேவையாற்றி வரும் பி.ஆர்.நாராயணசாமி நம்மிடம், '''காசியில் கால பைரவர், அசிதாங்க பைரவர், பூத பைரவர், பீஷ்ண அல்லது சண்ட பைரவர், கபால பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், ருரூ பைரவர், சம்ஹார பைரவர் மற்றும் ஆனந்த பைரவர் என பத்து விதமான பைரவர் கோயில்கள் உள்ளன. இவர்களில், காலத்துக்கு அதிபதியான
கால பைரவர் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட, எதிரிகளின் தொல்லை ஒழியும்'' என்றார். 'ஸ்ரீகால பைரவரை வணங்கு; காசி கயிற்றைக் கட்டு’ என்பார்கள். காசிக்குச் சென்று, ஸ்ரீகால பைரவரை தரிசிக்க இயலாதவர்கள்கூட, அங்கிருந்து பிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசி கயிற்றை, மனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால், கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்!  
இதோ... வந்துவிட்டது தீபாவளித் திருநாள். வாசகர்கள் பூரண நலமுடன் வாழ, ஸ்ரீஅன்னபூரணி குடிகொண்டிருக்கும் காசியம்பதியின் ஸ்ரீகால பைரவர் திருச்சந்நிதியில் பிரத்யேகமாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதில் காசி கயிறுகள் வைத்தும் பூஜிக்கப்பட்டது. அந்தக் காசி கயிறு பிரசாதம் இப்போது உங்கள் கைகளில்!
கூடவே, உலகுக்கே படியளக்கும் ஸ்ரீஅன்னபூரணியின் தாய்மையும் கருணையும் ததும்புகிற திருமுகம் கொண்ட அழகிய ஸ்டிக்கரும் உங்கள் கரங்களில்! காசி கயிற்றைக் கட்டிக்கொண்டு, தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்; ஸ்ரீகால பைரவர் உங்கள் குடும்பத்தைக் காவலனாக நின்று காப்பார்!  
படங்கள்: ராஜேஷ்குமார் சஹானி

நன்றி !!! சக்தி விகடன் 

Monday, November 14, 2011

பைரவர் பற்றிய குறிப்புகள் 

கும்பகோணத்தின் புறநகர்ப் பகுதியாக இன்று மாறி இருக்கும் பட்டீஸ்வரம்
கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவலஞ்சுழியும்,
ஸ்வாமிமலையும் போய் விட்டுத் திரும்பும் வழியில் சற்றுத் தென்மேற்கே வந்து
பட்டீஸ்வரம் போனோம். காமதேனுவும் அதன் மகள்களான நந்தினியும், பட்டியும் பூஜித்த
தலம். அதுவும் பட்டி தன் பாலைப் பொழிந்து பூஜித்த காரணத்தால் அவள் பெயரிலேயே
"பட்டீஸ்வரம்" என்ற பெயர் கொண்டது. வடமொழியில் தேனுபுரம் என்ற பெயர் கொண்ட
இந்தக் கோயிலின் சுயம்பு லிங்கம் ஆன மூலவர் "தேனுபுரீஸ்வரர்" என்று அழைக்கப்
படுகிறார். மார்க்கண்டேயர் பூஜித்த தலமும் கூட. அன்னை ஞானாம்பிகை. வசிஷ்டர்
விஸ்வாமித்திரருக்குப் "பிரம்ம ரிஷி"ப் பட்டம் கொடுத்த தலம். மேலும் "திருச்
சத்தி முற்றத்தில்" இருந்து வந்த ஞான சம்மந்தப் பெருமானுக்கு இந்தக் கோயில்
தேனுபுரீஸ்வரர் ஞானசம்மந்தரை வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க முத்துப் பந்தல்
அனுப்பி வைத்து இருக்கிறார். ஞானசம்மந்தர் முத்துப் பந்தலில் வரும் அழகைத் தன்
கண்ணால் காண வேண்டி நந்தியை விலகி இருக்கும்படித் தேனுபுரீஸ்வரர் பணித்தாராம்.
திருக்கோயிலின் ஐந்து நந்திகளுமே "சற்றே விலகி இருக்கும் பிள்ளை" களாக
இருக்கின்றன. ராமேஸ்வரத்தில் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்த ராமர் இங்கும் வந்து
வில்முனையால் கோடிதீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு.
உயர்ந்த பாணமான மூலவரையும், அம்மனையும் நிதானமாகத் தரிசனம் செய்ய முடிகிறது.
காரணம் கூட்டம் எல்லாம் துர்க்கை சன்னதியில்தான். திருப்பணி செய்த கோவிந்த
தீட்சிதர் சிலையையும் காட்டுகிறார்கள். ஸ்வாமி சன்னதிப் பிரஹாரத்தில் உள்ள
பைரவர் சன்னதியின் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும்
கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக்
காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார்.
அந்தச் சன்னிதியின் குருக்கள் எங்களைக் கூப்பிட்டுத் தரிசனம் செய்து வைத்தார்.
வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் அருள் பாலிக்கிறாள். இவளும் அண்ணாந்து
பார்க்கும் உயரம் கொண்டிருக்கிறாள். பக்தர்கள் கூட்டம் எல்லாம் இங்குதான்.
தற்சமயம் கோவிலின் நுழைவாயிலே வடக்குக் கோபுர வாயிலாக மாறி
விட்டிருக்கிறது.எட்டுக்கைகளுடன் அருள் பாலிக்கும் அன்னை வேண்டியவர்களுக்கு
வேண்டியதை அள்ளித் தருகிறாள். அதனால்தான் கூட்டம் தாங்கவில்லை என்கிறார்கள்.
இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே "சத்தி முற்றம்" உள்ளது. உண்மையில்
திருஞானசம்மந்தர் முதலில் இங்கே வந்துவிட்டுத்தான் தேனுபுரீஸ்வரர் அனுப்பிய
முத்துப்பந்தலில் "பட்டீஸ்வரம்" சென்றிருக்கிறார். முத்துப்பந்தல் விழா ஆனி
மாதம் நடைபெற்றிருக்கிறது. திருநாவுக்கரசர் இங்கே வந்துவிட்டு தழுவக்
கொழுந்தீஸ்வரரை வணங்கிச் சென்ற பின் தான் திருநல்லூர் சென்று திருவடி தீட்சை
பெற்றிருக்கிறார்.மனைவியைப் பிரிந்து பாண்டிய நாடு சென்ற புலவர் ஒருவர்
நாரையின் மூலம் தூது விட்ட
"நாராய்! நாராய்!, செங்கால் நாராய்!" என்ற பாடலை எழுதிய சத்திமுற்றப்புலவர்
இந்த ஊர்தான்.
வேத ஆகமங்களின் பொருள் தெரிய ஆசை கொண்ட அன்னை அண்ணலை வேண்ட அண்ணலும்
கூறுகிறார். தன் பக்தியின் மூலம் உலகத்தோர்க்கு "பக்தியே முக்திக்கு வித்து" என
உணர்த்த எண்ணிய அன்னை சக்தி வனம் வந்து ஒற்றைக்காலில் கடுந்தவம் செய்கிறாள்.
அன்னையின் தவத்தையும், பக்தியையும் உலகத்தோர்க்கு உணர்த்த எண்ணிய அண்ணல்
அன்னையைச் சோதிக்க எண்ணி அனல் பிழம்பாக வருகிறார். ஞானாம்பிகையான அன்னை தன்
ஞானத்தால் வந்தது தன் பதியே என உணர்ந்து அந்தப் பரஞ்சோதியை, எல்லை இல்லாப்
பரம்பொருளைத் தன் கைகளால் கட்டிக் குழைய அண்ணல் அன்னைக்கு அருள் பாலிக்கிறார்.
அன்னை கட்டித் தழுவிய நிலையிலேயே ஒரு தனி சன்னதி மூலவருக்கு இடப்பக்கம் உள்ளது.
அதன் பின்னாலேயே அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும் கண்டு
களிக்கலாம். மூலவர் கருவறையில் "சிவக்கொழுந்தீஸ்வரர்" ஆக அருள் பாலிக்கிறார்.
திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால்
தீப ஆராதனை செய்து காட்டுகிறார். ஆனால் நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று
சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள்
பாலிக்கிறாள்.
திருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த
அன்னைக்கும் , ஈசனுக்கும் சிறப்பு.