Monday, September 16, 2013

பைரவ வழிபாடு


அநேகமாக இந்த பைரவ வழிபாடு முதன் முதலில் வட இந்தியாவில் தோன்றிய பின்னரே இங்கு பரவியிருக்க வேண்டும். ஆதிசங்கரர் தான் முதன் முதலில் வழிபாட்டு முறைகளைப் பிரித்து ஷண்மத ஸ்தாபனத்தை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்றான சாக்த வழிபாட்டில் உள்ளடங்கி உள்ளது தான் ஸ்ரீபைரவ வழிபாடாகும்.

பைரவர் தம் பெருமையைப் புகழ்ந்து கால பைரவாஷ்டகத்தையும் அவர் பாடியுள்ளார். பைரவ மூர்த்திகளில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும். 

நள்ளிரவு வழிபாடு:

பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த காலத்தில் பராசக்தி பைரவி என்றும் பெயரில் நடமாடுகிறாள். அவளுடன் பெருமான் பைரவனாக வீற்றிருக்கின்றார். பரம ஞானிகளும் யோகிகளும் தமது தூக்கத்தை விடுத்து அந்த வேளையில் தியானத்தில் திரிபுரா பைரவியையும், பைர வரையும் தியானிக்கின்றனர்.

அபிராமி பட்டர் `யாமம் பைரவர் ஏத்தும் பொழுது' என்று பாடுகின்றார். தொடர்ந்து விழிப்புணர்வோடு வேண்டுபவருக்கு, நள்ளிரவில் திருவடி தரிசனம் தருபவள் பைரவி என்று அருளுவதும் இங்கு எண்ணத்தக்கதாகும். யாமம்-நள்ளிரவு. சீர்காழியில் வடுகநாதருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

வழிபாடு:

அனைத்து சிவாலயங்களிலும் சிவபூஜை என்பது காலையில் சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த சாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது. ஆலயத்தின் வடகிழக்கு முனையில் பைரவரும், தென்கிழக்கு முனையில் சூரியனும் அமைத்து வழிப்படப்படுகின்றனர்.

அபூர்வமாகச் சில தலங்களில் பைரவ மூர்த்திக்குத் தனிச்சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். பைரவருக்குப் பிரியமானவை நெய் அபிஷேகம், சிவப்பு மலர்கள், நெய் தீபம், உடைக்கப்படாத முழுத்தேங்காய், மாவிளக்கு, நார்ப்பழங்கள், சிவப்பு வண்ணம் தோய்ந்த கல்யாண பூசணிக்காய், தேன், வடை, அவித்த உணவுகள் முதலியவையாகும்.

பிரம்மோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்ய வேண்டும். அபூர்வமாகச் சில தலங்களில் ஆறு எட்டு கரங்கள் கொண்ட பைரவரைக் காண்கிறோம். பத்து, பதினாறு கரங்களுடன் கூடிய பைரவரும் உள்ளார்.

சிவாலயங்களில் பைரவர் மேற்கு நோக்கி இருப்பது உத்தமம் என்றும் தெற்கு நோக்கியிருப்பது மத்திமம் என்றும், கிழக்கு நோக்கியிருப்பது அதமம் என்று பிரதிஷ்டா நூல் குறிக்கின்றன.

நன்றி மாலைமலர் ! 

No comments: