Saturday, June 7, 2014

சனிதோஷம் போக்கும் பைரவர் வழிபாடு

இலந்தையடிவிளை முத்தாரம்மன் தலத்தில் பைரவர் நாய் வாகனத்துடன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். சுதை வடிவில் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் இல்லை. தொடர்ந்து 8 வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் இரவு வேளையில் பைரவருக்கு புனுகு சாத்தி, மரிக்கொழுந்து மாலை அணிவித்து நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால், நாம் நினைத்த நற்காரியங்கள் யாவும் ஈடேறும். இந்நாட்களில் அசைவத்தை தவிர்ப்பது நலம் பயக்கும். 

பைரவர், சனீஸ்வரரின் குரு. ஆதலால் இத்தல பைரவரை சனிக்கிழமை மாலை வேளையில், எள் எண்ணெய் எனும் நல்லெண்ணெய் தீபமேற்றி, 8 சனிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால், சகலவிதமான சனி தோஷங்களும் அடியோடு அகன்று விடும்.

வெள்ளிக் கிழமைகளில் இத்தல பைரவருக்கு வில்வ மாலை அணிவித்து, நெய்யில் சுட்ட உளுந்து வடை நிவேத னம் செய்து வழிபட்டால் செல்வமும், சகல ஐஸ்வரி யங்களும் கிடைக்கப்பெறும்.

அமாவாசை அல்லது ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவருக்கு எலுமிச்சை மாலை, நாகலிங்கப்பூ மாலை சூட்டி, எள் அன்னம் படைத்து முன்னோர்களை நினைத்துப் பிதுர் பூஜை மந்திரம் கூறி அர்ச்சித்து, 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையான பித்ரு தோஷத்தை பைரவர் நீங்கி அருள்வார்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு புனுகு சாத்தி, தாமரை பூ சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து 8 வாரங்கள் செய்து வர, திருமணத் தடைகள் அகன்று, மனதுக்குப் பிடித்த துணை அமையும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு புனுகு சாத்தி, நாகலிங்கப் பூ சூட்டி,

பால் பாயசம் நிவேதனம் செய்தால் நாக தோஷமும், சனிக்கிழமை ராகு காலத்தில் புனுகு சாத்தி, நாகலிங்கப் பூ சூட்டி, பால்பாயசம், கருந்திராட்சை நைவேத்தியம் படைத்து வழிபட்டால் விஷய பயமும் அடியோடு அகலும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை அஷ்டலட்சுமிகளும் வழிபட்டு, தங்கள் தனத்தை பெருக்கிக் கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.  

 நன்றி ! மாலை மலர்

No comments: