Thursday, June 16, 2011

Bairavar History & Method of Worship 7 - பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! - 7


கால பைரவர்: காசி கோயிலில் பைரவர்தான் பிரதானமாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஸ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார். அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவர்: ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சிவனின் பிரதிபிம்பம் என்று புராணம் கூறும். ஸ்வர்ணாகர்ஷண என்றால் எளிதில் கவரக்கூடிய என்று பொருள். இவர் செந்நிற மேனியையும் அல்லது மலர்ந்த தாமரை மலர் முகம், பொன்னிற சடை, முடியில் பிறைச்சந்திரன், கரங்களில் தாமரை, அமுத கும்பம், மணிகள் பொதிந்த சங்கம், அபயம், வரதத்தோடு பொன் சொரியும் குடத்தை ஒரு கரத்தால் தாங்கி, மறுகரத்தால் தம்மை தழுவும் ஆதி சக்தியை ஒரு புறத்துத் தழுவியவர் என ஆகமம் கூறுகிறது. ஸ்வர்ணாகர்ஷண பைவர மூர்த்தி அம்பாளுடன் சேர்ந்து அருள்பாலிப்பார். பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளும் அம்பிகை மகா ஸ்வர்ண பைரவி. பொன் சொரியும் குடம் ஏந்தியவள். அபயம் தரும் முத்திரை கொண்டு ஸ்வர்ண பைரவருடன் இணைந்து அருள்பாலிக்கிறார். வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். இவரை நம்பிக்கையுடன் வழிபவுவதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் மற்றும் பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம். நம்பிக்கையுடனும், பக்தியுடனும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டதி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்த வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுகிறார்கள். தினந்தோறும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்: வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும் தன விருத்தியையும் அடைவார்கள். பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்பொழுது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

நன்றி !!! தினமலர் 

No comments: