Sunday, August 14, 2011

ஸ்ரீ யோக பைரவர் - 3


சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் குடி கொண்டிருக்கும் யோக பைரவர்.
பொதுவாக பைரவர் சூலம் மற்றும் நாய் வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் யோக நிஷ்டையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதால் “யோகபைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

பைரவர் உருவான கதை
சிவபக்தரான இரண்யாட்சகனுக்கு அந்தாகாசூரன், சம்பாசூரன் என இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இவர்கள் இருவரும் கூட சிவபக்தர்களாக இருப்பதால் தட்டி கேட்க ஆள் இல்லாமல் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமை செய்து வந்தார்கள். இதனால் முனிவர்களும் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று எங்களை காப்பாற்றுமாறு முறையிட்டார்கள். மனம் இறங்கிய ஈசன், “கவலை வேண்டாம். எந்த ஒரு செயலுக்கும் காரணம் இருக்கும். அதனால் நீங்கள் கவலையடைய வேண்டாம். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய ஒருவன் வருவான்.” என்று கூறி தன் சக்தியால் பைரவரை உருவாக்கி அசூர சகோதரர்களிடம் அனுப்பினார் சிவபெருமான்.
ஈசனின் தூதுவராக வந்த பைரவரை சட்டை செய்யவில்லை அசூரர்கள். இதனால் பெரும் கோபம் கொண்ட ஈசன், தூதுவராக முன்பு அனுப்பிய பைரவரையே போர் வீரனாக அனுப்பி அசூர சகோதரர்களை கொன்று வீழ்த்தினார். சிவபெருமானின் உத்தரவின் பேரில் அசூரர்களை கொன்றாலும் உயிர்களை கொன்ற பாவத்தால் பைரவரை பிரம்ஹத்தி தோஷம் பிடித்து கொள்கிறது.
இந்த தோஷத்தில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சிவனிடம் முறையிட்டார் பைரவர். “நீ கொன்றைமர காட்டு பகுதிக்கு சென்று என்னை நினைத்து தவம் செய். உன் தோஷம் நீங்கும். அத்துடன் உன்னை உலகமே வணங்கும். உன்னை வணங்குபவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது அருள் செய்.” என்றார் சிவபெருமான். சிவனின் உத்தரவு படி கொன்றைமர காட்டு பகுதிக்கு வந்த பைரவர் அமைதியாக தியானம் செய்தார். இதன் பலனாக பைரவருடைய தோஷம் நீங்கியது. அத்துடன் சிவ அருளால் பல யோகங்களையும் பெற்றார். இதனால் தேவர்கள் பைரவரை யோகபைரவர் என்று புகழ்ந்தார்கள்.
பைரவரின் மகிமை
சனிஸ்வரரை யமதர்மராஜன் மிகவும் அவமானப்படுத்திவிடுகிறார். இதனால் மனம் வருந்தி தன் தாய் சாயாதேவியிடம் முறையிடுகிறார் சனி. “கலங்காதே. சிங்கத்துக்கு நேரம் கெட்டால் நரி கூட நீதிபதியாகும். இது இயற்கை. அதனால் நீ யமனை வெற்றி பெற பைரவரை வணங்கு. எல்லாம் நன்மையாக அமையும்.” என்றாள். தாய் கூறியது போல் சனிபகவான் பைரவரை வணங்கினார். பைரவரின் ஆசியை பரிபூரணமாக பெற்ற பிறகு யமதர்மராஜானே சனி பகவனை பார்த்து மரியாதை செலுத்தும் படியாக உயர்ந்தார். இதன் பிறகு சில காலம் கழித்து ஈஸ்வரரை பிடிக்க முயன்ற சனி, சனிஸ்வர பட்டமும் பெற்றார். பைரவரை தன் நண்பராகவும் குருவாகவும் மதித்தார் சனிஸ்வர பகவான்.   
இதன் பிறகு நவகிரகங்களான சூரியன் முதல் கேது பகவான் வரை பைரவர் பல துணை பெயர்களில் கிரகங்களின் சக்தியாக இருக்கிறார். காட்டில் முனிவர்கள் எந்த இறைவனை தவம் செய்வதாக இருந்தாலும் முதலில் பைரவரை வணங்கிய பிறகுதான் இறைவனையே வணங்குவார்கள். “எப்படி கண்களை  இமை காக்கிறதோ, அதுபோல் பைரவர் இமையாக இருந்து தன்னை வணங்கும் பக்தர்களை காப்பார்.” என்கிறார் வால்மீகி முனிவர்.

............... தொடர்ந்து ஸ்ரீ யோக பைரவரை அடுத்த பதிவிலும் வழிபடுவோம்!

No comments: