Saturday, November 26, 2011


பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி, ரதசப்தமி, உத்தராயன புண்ணியகாலத் துவக்கம் என எண்ணற்ற வைபவங்களுடன் திகழும் தை மாதத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு. ஆமாம், காவல் தெய்வமாம் ஸ்ரீபைரவர் வழிபாட்டுக்கும் உகந்த மாதம், தை!
தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி, இந்த மாதத்தின் அனைத்துச் செவ்வாய்க்கிழமைகளிலும் பைரவரை வழிபடுவது சிறப்பு.
அதிலும், ஸ்ரீபைரவரின் மகாத்மியத்தை அறிந்து வழிபடுவதால், பலன்கள் பன்மடங்கு அதிகம் கிடைக்குமே! அறிந்துகொள்வோமா ஸ்ரீபைரவ மகிமையை!
சிவாலயங்களில், ஸ்ரீவிநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிக்கும் வழிபாடு,  ஸ்ரீபைரவ தரிசனத்துடன் நிறைவடையும். ஆமாம், அகில உலகங்களையும் காத்து ரட்சிக்கும் சிவனாரின் கோயில்களுக்கு, ஸ்ரீபைரவரே காவல் தெய்வம்! உலகையும் அதில் அமைந்த திருத்தலங்கள் மற்றும் தீர்த்தங்களையும் காவல் புரியும் தெய்வம் ஆதலால், க்ஷேத்ரபாலகன் என்றும், தீர்த்தபாலகன் என்றும் ஸ்ரீபைரவரை பலவாறு போற்றுகின்றன புராணங்கள்!
தன்னுடைய அன்பர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயோர் களுக்கு பயங்கரமானவராகத் திகழ்வதால் ஸ்ரீபைரவர் என்றும், வஜ்ஜிரகோட்டையாகத் திகழ்ந்து, தன்னைச் சரணடையும் பக்தர்களைக் காப்பவர் ஆதலால் ஸ்ரீவயிரவ மூர்த்தி என்றும் இவருக்குத் திருப்பெயர்! இவர், ஞானிகளிடம் அறிவை வளர்க்கும் ஸ்ரீஞான பைரவராகவும், யோகிகளுக்குக் காவலாக இருப்பதுடன், தாமே பெரிய யோகியாக விளங்கி ஸ்ரீயோக பைரவராகவும், வீரர்களிடம் உக்கிர பைரவராகவும், பஞ்சபூதங்களின் சீற்றங்களில் இருந்து பூமியைக் காப்பதால் ஸ்ரீபூத பைரவராகவும் அருள் புரிவதாக ஆன்றோர்கள் சிலாகிக்கிறார்கள்!
உலகையும் உயிர்களையும் காக்கும் தன்மை சிவ பெருமானுக்கே உரியது என்பதால், அவருடைய ஒருகூறே பைரவமூர்த்தியாக எழுந்தருளி, அன்பர்களுக்கு அருள்கிறது என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மன், ஆதி காலத்தில் சிவனாரைப் போன்றே ஐந்து தலைகளுடன் திகழ்ந்தார். ஒருமுறை, அவர் அகந்தையால் அறிவு மயங்கிச் சிவ நிந்தனை செய்தபோது, சிவபெருமான் பைரவரைத் தோற்றுவித்தார். பைரவர், பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுத்துக் கபாலமாக்கிக் கொண்டார்.அடி-முடி தேடியபோது, 'திருமுடி கண்டேன்எனப் பொய்யுரைத்ததால், பிரம்மனின் 5-வது தலையை பைரவர் மூலம் கொய்ததாகவும் ஒரு புராணத் தகவல் உண்டு.
பிரம்மனின் சிரம் கொய்யப்பட்ட திருவிடம் திருக்கண்டியூர் ஆகும். தஞ்சாவூர்- திருவையாறு பாதையில் உள்ள இந்த ஊர், சிவனாரின் அட்ட வீரட்ட திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அருள்பாலிக்கும் திருக்கண்டீஸ்வரரையும், பிரம்மனின் சிரம்கொய்த பைரவரையும் தரிசிப்பது சிறப்பு.
ந்தகாசுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்தியதுடன், அவர்களைப் பெண் வேடத்துடன் திரியும்படிச் செய்து அவமானப் படுத்தினான். தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவர், ஸ்ரீமகாபைரவரைத் தோற்றுவித்து அந்தகனை அழிக்கும்படி ஆணையிட்டார். அதிஉக்கிரத்துடன் அந்தகன் மீது போர்தொடுத்த பைரவர், அவனைத் தனது சூலத்தில் குத்தித் தூக்கியவாறு மூன்று உலகங் களிலும் திரிந்தார். அவனுடைய உடலிருந்து வழிந்த ரத்தத்தைக் குடித்தார். அஞ்சி நடுங்கிய அந்தகாசுரன், பைரவரைத் துதித்தான். அதனால் மகிழ்ந்த ஸ்ரீபைரவர், அவனைச் சூலத்தில் இருந்து விடுவித்தாராம். அதேபோல், முண்டகன் முதலிய இன்னும்பல அசுரர்களையும் அழித்து, ஸ்ரீபைரவர் தேவர்களைக் காத்து பரிபாலித்த கதைகளும் புராணங்களில் உண்டு.
வானவர்களுக்கு மட்டுமல்ல, தூய பக்தியுடன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் வேண்டிய வரம் தந்து அருள்பாலிக்கும் கண்கண்ட தெய்வம் ஸ்ரீபைரவர். கடன் தொல்லை நீங்கவும், சத்ருபயம் அகலவும், பில்லி-சூனியம் போன்ற தீவினைகளின் பாதிப்புகள் இல்லாமல் இருக்கவும் ஸ்ரீபைரவரை பலவாறு போற்றி வழிபடுகின்றனர்.
தேய்பிறை அஷ்டமி திருநாள் ஸ்ரீபைரவரை வழிபடுவதற்கு உகந்த தினம். குழந்தை இல்லா மல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி திருநாட்களில்... செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர்.
அதேபோல், தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ ஹோமம் செய்வ துடன், பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் கலச தீர்த்தத்தைப் பருகுவதால் தீராத பிணிகளும் தீரும் என்பர்.
அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று, அங்கு அருள்பாலிக்கும் பைரவமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி, தயிர் அன்னம், தேன் மற்றும் தேங்காய் சமர்ப்பித்து வழிபடுவதால், பில்லிசூனியம் போன்ற தீவினைகள் நீங்கும்; பகைவர்களும் நண்பர்களாவார்கள். வீட்டிலேயே நேரம் கிடைக்கும்போது, ஸ்ரீபைரவ சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதாலும் மிகுந்த பலன் உண்டு.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், ஸ்ரீபைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும் என்பார்கள். வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் அல்லது வெள்ளிக்கிழமை மாலை வேளையில்,
வில்வம் மற்றும் வாசனை மலர்களைச் சமர்ப்பித்து ஸ்ரீபைரவருக்கு  நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும்; செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனீஸ்வரரின் அதிதேவதை பைரவர். சனிக்கிழமைகளில் ஸ்ரீபைர வருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகுமாம். ஸ்ரீமகாபைரவரை திரிபுர பைரவராகவும் வழிபடும் வழக்கம் உண்டு. கரைசேர முடியாத பெருந்துன்பங்களையும் நீக்கி அருள்புரிவாராம் ஸ்ரீதிரிபுர பைரவர்.
கோயில்களில் நடைபெறும் பிரம்மோற்ஸவத்துக்கு  முன்பாகவும் விழா முடிந்த பின்னரும் ஸ்ரீபைரவரை வழிபட வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள். முன்பெல்லாம், சிவாலயங்களில் இரவில் பைரவரை பூஜித்து வழிபட்டு, ஆலயக் கதவுகளை மூடி, சாவியை அவரது சந்நிதியில் சமர்ப்பிப்பது வழக்கம். இப்போது, கைமணியையும் கலசத் தையும் அவர்முன் வைத்துச் செல்கின்றனர்!
கோயிலுக்குச் சென்று வழிபாடு முடித்துத் திரும்புமுன் ஸ்ரீபைரவரை மனதார தரிசித்து வழிபட்டு, உங்கள் பிரச்னைகளையும் அவரின் திருப்பாதத்தில் சமர்ப்பித்து வாருங்கள்; ஒட்டுமொத்த இன்னல் களையும் நீக்கி, உங்களையும் உங்கள் சந்ததியையும் சிறப்பாக வாழ வைப்பார் ஸ்ரீபைரவர்.

நன்றி ! சக்தி விகடன் 

No comments: